Thursday, September 30, 2010

தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!!


பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதற்காகத்தான் நாம் பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். ஆனால் ஒரு சிலர் தம் மீது பாவக் கறைகளை அள்ளிப் பூசிக் கொள்ளவே பள்ளிவாசலுக்கு வருகிறார்கள் என்பதை நினைக்கையில் கவலையாகவிருக்கிறது.

கடந்த திங்கட் கிழமை கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு லுஹர் தொழுகைக்காகச் சென்றிருந்தேன். தொழுதுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பெறுமதி வாய்ந்த எனது காலணிகளைக் காணவில்லை.

பள்ளிவாசல் சிற்றூழியரிடம் சென்று முறையிட்டேன். `அதெல்லாம் சகஜமப்பா' என்ற பாணியில் கையை விரிக்க மாத்திரம்தான் அவரால் முடிந்தது.

"சில தினங்களுக்கு முன்னரும் இரண்டு சோடி காலணிகள் காணாமல் போய்விட்டன தம்பி. இது தொடர்ந்து நடக்கிறது" என்றார் அவர். அங்கு கூடி நின்றவர்களும் ஆளைப் பிடித்து `சாத்த' வேண்டும் என்றார்கள்.

ஆனால் எனக்கு மாத்திரம் அந்த இடத்தில் கோபம் வருவதற்கு பதிலாக ஒரு கவிதைதான் வந்தது.

"பள்ளிக்குத் தொழச் சென்றேன். செருப்பைக் காணவில்லை. தொழ வந்தவர்கள் திருடியிருப்பார்கள்...! இல்லை... இல்லை... திருட வந்தவன் தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!!"

எங்கேயோ எப்போதோ படித்த இந்தக் கவிதை எனக்குள் இப்போதும் பத்திரமாய் பதிந்திருக்கிறது... என் செருப்பும் திருட்டுப் போகும்வரை...

(இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்தால் என்ன தெரிகிறது....? இது ஒன்றும் செருப்பு விற்கும் கடையில்லை... தென்கொரியாவில் பார்க் எனும் 59 வயது செருப்புத் திருடனால் வீடுகளிலும் மத தலங்களிலும் ஹோட்டல்களிலும் திருடப்பட்ட 1700 சோடி செருப்புகள்தான் இவை... அப்பாடா...இதை விட நம்ம நாட்டு திருடர்கள் பரவாயில்லை போலும்...?)